ஜமதக்னி 77
அவள் கைகள் ஆடித் தவித்தன.
“ஆமாம், அதுதான் சரி. திருப்பி என்னையே கேட்டுடுங்கோ!”
“உனக்கு என்ன வேண்டும், உனக்கில்லாமல் நான் என்னத்தைத் தனியாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்?”
இரு கைகளாலும் அவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள்.
“நீங்களே சொல்லுங்கோ. நீங்கள் பழையமாதிரி என்கிட்டே இருக்கேளோ? அதுவும் வரவர இந்தக் குத்து விளக்கண்டை உட்காந்துண்டு இந்தப் படத்தையும் இந்தச் சுடரையும் பார்த்துண்டு இருக்கறதைத் தவிர வேறென்ன பண்ணிண்டிருக்கேள்? நான்தான் கேக்கறேன், அப்படியென்ன அதில் நாங்கள் எல்லாம் காணாததைக் காணறேள்?”
அவன் தலை மெதுவாய்க் குனிந்தது.
பெருமூச்செறிந்த வண்ணம் மறுபடியும் தலை நிமிர்ந்தான். அவன் பார்வை சுடரைத் துளைக்க முயன்றது.
“என்னத்தைக் காண்கிறேன்? நான் இந்தச் சுடரைப் பார்த்துக்கோண்டேயிருக்கிறேன். கொஞ்ச நாழிகைக்குப் பிறகு இதைத்தவிர, இதன் பின்னாலும் முன்னாலும்,பக்கத்திலும் எல்லாமும் இருண்டுவிடுகின்றன. இச்சுடர் நாக்கு மாத்திரம் தனியாய் வயிற்றுப்பக்கம் சற்று அகன்று நீலவிளிம்பு கட்டிக்கொண்டு நிற்கிறது. அது நிற்பதற்கே ஆதாரமாயிருக்கும் திரி முதல் திருஷ்டிக்கு மறைந்து விடுகிறது. பிறகு இந்தச் சுடர் ஒன்றுதான், ஒன்றே தான்—”
“பிறகு, இச்சுடரின் வயிறு கொஞ்சங் கொஞ்சமாய் அகன்று, மடல் மடலாய் எண்ணற்ற இதழ்கள் குவிந்து