பக்கம்:அடி மனம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அடிமனம்

கணக்கான நோயாளிகளைச் சோதனை செய்து பொறுமையோடு அவர் செய்த ஆராய்ச்சிகளே அவருக்கு உதவியாக நின்றன.

அவர் தமது கருத்துக்களை முதலில் வெளியிட்ட போது எத்தனையோ எதிர்ப்புகள் தோன்றின; எத்தனையோ பேர் அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அவர் தோற்றுவித்த மனப் பகுப்பியல் பொதுப் படையாக எங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது; மனத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு வழி காட்டியவர்களில் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு சிறந்த ஸ்தானமும் கிடைத்திருக்கிறது.

பிராய்டு கூறிய விஷயங்கள் எல்லாம் அப்படியே உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மெய் தான். மனத்தைப்பற்றிப் புதிதாக ஒரு கருத்தை வெளியிடும்போது முதலில் கூறிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று யாரும் எதிர் பார்க்கமுடியாது. அதன் அடிப்படை மட்டும் உண்மையாக இருக்கிறதா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பிராய்டே பிற்காலத்தில் தமது கருத்தின் அம்சங்கள் சிலவற்றை மாற்றி யமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவி செய்த பெருமை எவ்வகையிலும் குறைந்து போகாது. உளவியல் என்பதே தத்துவ சாஸ்திரத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சாஸ்திரமாக வளர்ந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. அது குழந்தைப் பருவத்திலிருக்கும் ஒரு சாஸ்திரம் அதிலே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மனத்தின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தவர் சிக்மண்ட் பிராய்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/25&oldid=1004415" இலிருந்து மீள்விக்கப்பட்டது