பக்கம்:அடி மனம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிமன விந்தைகள்

53


இத் தைப்பற்றி நேர்முகமாக அறிந்து கொள்வது இயலாது. அது மறைந்து நிற்கிறது. அதைப்பற்றி மறை முகமாகவே நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம். மனக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையிலே அதை ஆராய முடிகிறது. ஒருவனுக்கு ஏற்படும் கனவுகளைப் பரிசீலனை செய்வதன் மூலமும் அதைப்பற்றி அறியலாம். ஒருவன் யோசனை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு உடனே ஒரு கெட்ட காரியம் செய்ய முயலுகிறானென்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்திலும் இத் வெளியாகிறது.

வாழ்க்கை முறை செம்மையாக அமைந்த மனிதனிடத்திலே அகம் சரியானபடி காரியம் செய்கிறது என்று கூறலாம்; அது இத்தை லகானிட்டுப் பிடித்து அதன்மேல் ஆதிக்கம் செலுத்தும்; அதீத அகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும். உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பிலும் அவனுக்கு ஏற்ற முறையிலேயே காரியங்கள் நடைபெறும். அகம் தனது கடமையைச் செவ்வனே செய்து வருகின்றபோது வாழ்க்கையில் அமைதி நிலவும். அப்பொழுது அது தனது அதிகாரத்தை இத்துக்கோ, அதீத அகத்திற்கோ, வெளியுலகத்திற்கோ பெரியதோரளவிற்கு விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் அப்படி விட்டுக் கொடுக்க நேர்கின்ற காலத்தில்தான் தொல்லைகள் உண்டாகின்றன.

இத் என்பது இன்பநாட்டம் என்ற கொள்கையைப் பின் பற்றியே வேலை செய்கிறதல்லவா? ஆனால் அகம் அப்படிச் செய்வதில்லை. அது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. சமூகத்திற்கு உடன்பாடல்லாத காரியத்தில் அது இறங்க விரும்புவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/58&oldid=1005330" இருந்து மீள்விக்கப்பட்டது