பக்கம்:அணியும் மணியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயனகோடல்
மாட்சியின் மாசற்றார் கோள் - 646

எனத் தாம் சொல்லும்போது எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதையும், பிறர் சொல்வதில் உள்ள பொருளை எவ்வாறு கொள்ளவேண்டும் என்பதையும் கூறுகின்றார்.

மேலும், எடுத்தாளுஞ் சொற்களில் தக்கசொல்லை எடுத்தாளுவதோடு, மிக்க சொல்லையும் அமைப்பது சிறப்புதரும் என்பது அவர் கருத்துரையாகும். வெல்லுஞ் சொல் அதனினும் வேறு இல்லாத வகையில், அச் சொல் அமைய வேண்டும் என்பதை,



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து - 645

என்ற குறட்பாவால் நன்கு விளக்குகின்றார்.

இவ்வாறு நிரந்து இனிமையாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின், அவர் சொல்லை உலகம் கேட்டுச் செயலாற்ற முன்வரும் என்பது அவர்தம் நம்பிக்கையாகும். வள்ளுவர் குறள் நிரந்து இனிது அமைந்திருப்பதால்தான் அதில் உள்ள கருத்துக்கள் உள்ளத்தில் நன்கு பதிந்து. உலகினரை நன்னெறிக்கண் செயல்படுத்துகின்றன என்று கூறலாம்.



விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
- 648

என்பது அவர்தம் நூலுக்கே தரும் சிறந்த விளக்கவுரை எனக் கூறலாம். இக் குறட்பாக்கள் சொல்லின் திறத்தைப் பொதுப்படையாக விளக்குவன எனினும், அவை அவர்தம் திருக்குறளின் சொல் திறத்தையே விளக்குவன எனக் கூறலாம்.