பக்கம்:அணியும் மணியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

இதனை அடுத்து, மொழியின் உயர்வையும் நாட்டின் பெருமையையும் ஒரே இடத்தில் வைத்து இரண்டனுக்கும் உள்ள நெருங்கிய உறவைக் காட்டுவார் போன்று அமைத்திருக்கும் நிலை போற்றத்தக்கதாகும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த இந்துஸ்தானம்-அதைத்
    தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

என்று கூறி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் பிரிக்க முடியாதன என்பதைக் காட்டுகின்றார். நாடு வாழ மொழி வாழ வேண்டும் என்பதும், மொழி வாழ நாடு வாழ வேண்டும் என்பதும் பாரதியாரின் கொள்கை என்பது புலனாகின்றது.

நாட்டுவாழ்த்துப் பாடலிலும் இதே பண்பைத்தான் காண்கிறோம். செந்தமிழும் தமிழ் பேசும் மக்களும் இம் மக்கள் வாழும் நாடும் வாழ வேண்டும் என்றும் முறையாகக் கூறும் சிறப்பைக் காண்கின்றோம். மொழியையும் மக்களையும் நாட்டையும் தனித்துப் பிரித்து வாழமுடியாது என்பது அவருடைய அடிப்படைக் கொள்கையாக விளங்குகிறது. அவர் அமைக்கும் வாழ்த்துரை இதுவே யாகும்:

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு

நாட்டுணர்வையும் மொழியுணர்வையும் மட்டும் அவர் தம் பாட்டுத்திறத்தில் அமைக்கவில்லை. நாடு வாழவும் மொழி வாழவும் அவர் கூறும் வழிவகைகள் அவர் பெருமையை உயர்த்தி விடுகின்றன. நாடு வாழத் தொழில் வகைகள் சிறக்க வேண்டும் என்பது அவர் காட்டும் வழியாகும். தொழில் சிறக்க வேண்டுமானால் தொழிலுக்கு மதிப்பும் உயர்வும் கொடுக்க வேண்டும் என்பது அவர்தம் அறிவுரையாகும்.