பக்கம்:அணியும் மணியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பெருமையும் என்பதை உணர்ந்த மந்தரை, கைகேயி உரிமை இழப்பதால் அவள் தந்தை வலிமை இழந்து பகைவர்க்கு அடங்கி வாழவேண்டிய சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறாள். வரன்முறைக்கு மதிப்புக் கொடுத்து இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பைத் தவற விட்டால் இராமனுக்குப் பிறகும் அவள் மைந்தன் பரதன் ஆட்சிக்கு வரமுடியாது என்பதையும், அவன் மைந்தர்களும் அடுத்த தம்பியாகிய இலக்குவனுமே ஆட்சிக்கு வர இயலும் என்பதையும் காட்டுகிறாள்.

பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும்

அடுத்த தம்பிக்குமாம் பிறர்க் காகுமோ

என்று அவள் என்றும் உரிமை இழக்கும் சிறுமையைக் காட்டுகிறாள்.

இறுதியில், தன்னலம் மனச்சான்றை மங்கவைத்து வெற்றிகொண்டு தன் கொடிய தொழிலைச் செய்ய முற்படுகிறது. நன்மையும், அன்பும், பேரறமும் அவள் உள்ளத்தை விட்டு அகல்கின்றன. அவள் தூய சிந்தையும் திரிந்தது என்று கம்பர் முடிவாகக் கூறிமுடிக்கிறார். நன்மையில் உறுதி கொண்ட அவள் உள்ளம் தீமையில் நிற்கும்பொழுதும் அங்கும் உறுதியோடு விளங்குகின்றது. அவள் உள்ள நிறைவில் ஒரு கள்ளச் சிந்தனை புகுந்துவிடுகிறது. நிறையுள்ளம் குறையுள்ளமாகிறது. அளியும் ஆழ்ந்த அன்பும் நிறைந்த பேருள்ளம் தன்னலமும் கொடுமையும் சூழ இடம் கொடுத்து விடுகிறது. தெய்வக் கற்பினாளும், அருள் உள்ளம் படைத்தவளும், தாயுள்ளம் கொண்டிருந்தவளுமான கைகேயி பேயுள்ளம் பெற்றுவிடுகிறாள்.

மன்னன் தசரதன், “பரதனுக்கு மண்ணைப் பெற்றுக் கொண்டு இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றைய வரத்தைக் கேளாது விடு” என்று மன்றாடுகிறான். எந்த முறையீடும் அவள் செவி ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. அவன் பலவாறு கூறி