பக்கம்:அணியும் மணியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே

- வழக்குரை காதை

எனச் சோழநாட்டின் நீதிவழுவா நெறிமுறையைக் காட்டிப் பாண்டிய நாட்டின் கொடுங்கோன்மையை மிகுதிப்படுத்திக் காட்டுகின்றாள். புள்ளுறு புன்கண் தீர்த்த சிபிச் சோழனின் சிறப்பையும், ஆவின் கண்ணீர் நெஞ்சைச் சுடத்தன் மகனை அதே தேராழியில் மடித்த மனுநீதிச் சோழனின் மாண்பையும் புலப்படுத்துகிறாள்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோன்மையைச் சுட்டச் சோழநாட்டின் செம்மை வழுவா நீதியைக் காட்டியதைப் போலவே, பாண்டிய நாட்டில் நீதி குன்றிய அப்பொழுதைய நிலையை உணர்த்த நீதிவழுவாப் பண்டைய நெறி முறைமையையும் ஒப்பிட்டு வேறோர் இடத்தில் அமைத்துக் காட்டுகின்றார் ஊழ்வினையே செங்கோல் வளைந்தமைக்குக் காரணம் என உணர்த்துவார். அப்பொழுது ஏற்பட்ட விளைவை விளக்கப் பண்டுதொட்டுப் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்து வந்த தூய செந்நெறியை யுணர்த்துகிறார். மதுராபதித் தெய்வம் கண்ணகிக்கு ஊழ்வினை உருத்து வந்துட்டும் என்பதை உணர்த்தும் பொழுது, குன்றிய ஆட்சியின் நிலையை உணர்ந்த கண்ணகிக்குப் பாண்டியனின் பண்புள்ள பழைய ஆட்சி முறையை விளக்கிக் கூறுவதாக அமைக்கின்றார். அந்த நாட்டில் மறைநாவோசையல்லது குறை தெரிவிக்கும் மணிநாவோசையே எழுந்ததில்லையென்றும், பகைமன்னர் தோல்வி பற்றித் தூற்றுவரேயன்றிப் பழிபற்றிக் குடிமக்கள் அவனைத் தூற்றியதில்லை என்றும் பண்டைய செங்கோன் முறையைச் சிறப்பித்துக் கூறுகின்றார்.

மறைநாவோசை யல்லது யாவதும்

மணிநாவோசை கேட்டது மிலனே