பக்கம்:அணியும் மணியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அடிதொழ திறைஞ்சா மன்னரல்லது

குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் (கட்டுரை)

என்று கூறிக் கண்ணகிக்குப் பாண்டியனின் நெறிமுறையின் இருவேறு நிலைகளைக் கூறி ஊழ்வினையால் வளையாத கோல் வளைந்த காட்சியை உணர்த்துவது போல அமைக்கின்றார்.

வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் முரணை அமைத்து இன்பத்தையும் அதற்கு எதிரான துன்பத்தையும், கொடுமையையும் செம்மையையும், அழகையும் அழுக்கையும் அமைத்துக் காட்டும் கவிஞர், வாழ்வின் ஒழுக்கநெறிகளிலும் உள்ள முரண்பட்ட வியல்புகளை மகளிர் இருவர் வாழ்க்கை முறையில் அமைத்துக் காட்டுகிறார். காமவேள் கோட்டம் வழிபட்டுக் கணவனை அடைய முயலும் தேவந்தியின் நெறியையும், கணவனை வழிபடுவோர் தெய்வத்தை வழிபடுதல் சிறப்பன்று என்று கொண்ட கண்ணகியின் நெறியையும் ஒரே இடத்தில் கூறி, இருவேறு நெறிகளில் உள்ள குறைவு நிறைவுகளை எடுத்துக் காட்டுகின்றார்.

வருங்காலத்து வரும் தீய நிகழ்ச்சிகளைத் தீக்கனா ஒன்றில் கண்ட கண்ணகி மருண்டு, தன் தோழியான தேவந்தியிடம் சொல்ல, அவள்,

சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவ ருலகத்துத் தையலார் (கனாத்திறம்)

என்று, பொதுவாக உலகத்தில் ஒருசிலர் மேற்கொள்ளும் நெறியாகக் கூறுகின்றாள். கற்புடைய பெண்டிர்க்கு அந்நெறி ஒவ்வாது என்பதைக் கண்ணகி, ‘பீடு அன்று’ என்று சுருக்கமாகக் கூறி மறுப்புரை தருகிறாள். கொழுநனை வழிபடுகின்றவர் தெய்வத்தை வழிபடுதல் குறையானதாகும் என்ற பண்பட்ட கருத்தை அப்பாவைக்கு உணர்த்தத் தொடங்குகிறாள். காமவேள் கோட்டம் தொழும் தையலார் செயலையும் அது பீடு அன்று