பக்கம்:அணியும் மணியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது - 156

என்று அந்திப் பொழுதுக்கு அரசரின் வெற்றிச் செயல் கூறப்பட்டு, இக் காட்சி கற்பனையழகோடு விளங்குகிறது.

வீமன் மடந்தையாகிய தமயந்தி, கையில் மாலை ஏந்தி மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் அன்னமென மென்னடை நடந்து சென்றாள். மண்டபத்தில் வீற்றிருந்த மாபெரு மன்னர்கள், விழித்த கண் மூடாமல் வேல் விழியாளை நோக்கி இருந்தனர். இதுவே அங்கு நடந்த நிகழ்ச்சியாகும். இச் செய்தியினைச் சொல்வதில் புலவரின் கற்பனைச் சிறப்பு அமைந்திருக்கும் அழகு அச் செய்தியில் சுவையை ஊட்டிக் கவிதையைக் கவினுறச் செய்கிறது.

அன்னத்தைப் போல அணிநடை நடந்து அரசர் வீற்றிருக்கும் அவையில் தமயந்தி அமைதியாகச் செல்கிறாள். அப்பொழுது அவள் அழகில் தம் அறிவு மயங்கி அவள் பொன்னிற மேனியின் பொலிவில் தம் மனத்தைப் பறிகொடுத்த அவர்கள், விழித்த கண்களை மூடவே இல்லை என்கிறார். அதனால் அந்த மண்டபம் தாமரையே பூத்துக் கிடந்தது போலக் காட்சி அளித்தது என்கிறார். அத் தாமரை பூத்த தனி மண்டபத்தில் வெள்ளைநிறச் சிறையன்னம் செய்யதாளால் அசைந்து நடந்து செங்கமலப் பொய்கை நோக்கிச் செல்வதைப் போல வெள்ளிய ஆடையும், ஒள்ளிய மேனியும், சிவந்த வல்லி தீட்டிய தாளும் உடைய தமயந்தி சென்றாள் என்று கூறுகிறார்.

விழித்த கண்களைத் தாமரைக்கு உவமைப்படுத்துவதால், அம் மண்டபம் தாமரைப் பொய்கை போல இருந்தது என்றும், அங்கு அவள் நடந்து சென்றது அன்னம் செல்வதுபோல இருந்தது என்றும் உணர்த்தி அவர் தம் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.