பக்கம்:அணியும் மணியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கணவனோடு பிணக்குக் கொண்ட காரணத்தால், கதவைத் தாளிட்டுக்கொண்டு தனியே சமையலறையில் தன் கடமையில் கண்ணுங் கருத்தும் செலுத்தியவளாய், அவனிடம் பேச மனமில்லாதவளாய் விருவிருப்பாகத் தன் கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறாள் ஒரு தலைவி. அவள் வாளைமீனைக் கழுவி அறுத்து வகைப்படுத்திச் சமையல் செய்யத் தொடங்குகிறாள். கண்களில் புகைபடிய, நெற்றியில் வியர்வை துளிர்க்க, அவற்றைத் தன் புடைவையில் துடைத்துக் கொண்டு, அவனிடம் பேசாமல் சமையலறையில் தன் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் புன்னகை தவழுமா என்று எதிர்பார்த்து நிற்கிறான். புன்னகை தவழவில்லையென்றாலும், புன்முறுவலாவது அவள் முகத்தில் மெல்லத் தோன்றக்கூடாதா என்று ஏங்குகிறது அவன் நெஞ்சம். “முன்பெல்லாம் வரும் விருந்தினர் இப்பொழுது வரக்கூடாதா? அவர்கள் பொருட்டாவது அவள் முகம் மலருமே அம் மலர்ந்த முகத்தை அப்பொழுதாவது பார்க்க முடியுமே! எங்கள் ஊடலும் மெல்லத் தணியுமே!” என்று அவன் அன்புடை நெஞ்சம் எதிர்பார்க்கும் காட்சியை நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே - நற்.120