பக்கம்:அணியும் மணியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

பொருளால்தான் இந்த உலக நெறியும் செயலும் நன்மையும் சிறந்து விளங்குகின்றன என்று எடுத்துக் காட்டுகின்றார். பொன்னிருந்தால்தான் பொருபடை திரட்ட முடியும் என்றும், அப்படை இருந்தால்தான் நாடுகளைக் கைப்பற்ற இயலும் என்றும், நாட்டாட்சி கிடைத்தால்தான் நற்பொருள் அனைத்தும் பெறலாம் என்றும் அந் நற்பொருளால் பெறக்கூடா இன்பமே இவ்வுலகில் இல்லை என்றும் கூறக் காண்கின்றோம்.

பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியிற்
பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே -விமலை 34

என்று உணர்த்துகிறார்.

திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் துறவியாகவும் இருந்தமையால், சமண சமயக் கொள்கைகளே அவருடைய அறக்கொள்கைகளாக விளங்குகின்றன. அவற்றை வாய்க்கும் இடமெல்லாம் புகுத்தித் தம் கொள்கைகளை நிலைநாட்டும் நிலையைக் காண்கின்றோம்.

சீவகன் சில துறவிகளைச் சந்திப்பதாகக் கதை நிகழ்ச்சியை அமைக்கின்றார். இக் கதை நிகழ்ச்சிக்கும் சீவகன் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லையெனினும், சில அறங்களை வற்புறுத்தவே இதுபோன்ற பகுதிகளை அமைப்பது ஆசிரியரின் இயல்பாக அமைகிறது.

சமண சமயத் துறவிகள் என்று சொல்லப்படுகின்ற அவர்கட்கே சீவகன் வாயிலாகச் சிறந்த கொள்கைகளையும் நெறிகளையும் உணர்த்தக் காண்கின்றோம். வள்ளுவர்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.