3. கதிரியக்கம்
யுரேனியம் - 235, யுரேனியம் - 233, புளூட்டோனியம் - 239 போன்ற பளுவான அணுக்கள் பெருலிசையுடன் கூடிய பொது இயல் மின்னிகளால் தாக்கப் பெறுங்கால் அவை சிதைவுறுவதைப் ‘பக்கு விடுதல்' என்ற பெயரால் குறிப்பிட்டோம். இப் 'பக்கு விடுதல்' என்ற செயல் இயற்கையில் தொடர்ந்து நடைபெறுவதன்று. எப்பொழுதாவது அண்டக் கதிர்களால் நுட்பமான இந்த அணுக்கள் தாக்கப் பெறுங்கால் இந்நிகழ்ச்சி நேரிடும்.
கதிரியக்கம் - பக்குவிடுதல், ஒரு வேறுபாடு : கதிரியக்கம் என்பதும் அணுக்கள் பக்குவிடுதலைப் போன்ற ஒரு நிகழ்ச்சியே, இக்கதிரியக்கத்திலும் உட்கருச் சிதைவுறுதல் நடைபெறுகின்றது. ஆயினும், இது நடைபெறுவதற்குரிய காரணமும், நடைபெறும் முறையும், அதனால் ஏற்படும் விளைவும் முற்றிலும் வேறுபடுகின்றன. கதிரியக்கம் என்ற நிகழ்ச்சியை முதன் முதலாக 1895-ல் கண்டறிந்தவர் ஹென்றி பெக்குரல்[1] என்பார். இதற்கு முதலாண்டில்தான் ராண்ட் தென்[2] என்பார் புதிர்க் கதிர்களைக்[3] கண்டறிந்திருந்தார்.