பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அணுவின் ஆக்கம்



இப்புத்தகம் அமைதிக்காலத்தில் அணுவாற்றல் எவ்வாறு பயன்படுகிறது என்பதை உணர்த்த எழுந்தது. எனவே, நாம் மக்களையும் மாநகர்களையும் நொடிப்பொழுதில் அழிக்கவல்ல அணுகுண்டினைச் சிந்தையிலும் கொள்ள வேண்டாம். மானிட வாழ்விற்கு, வையத்தில் வாழ்வாங்கு வாழ வழியமைப்பதற்கு, அணுவாற்றல் எவ்வெவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதை மட்டிலும் சிந்தையில் கொண்டு அவற்றினை அறிய முற்படுவோம்.

ஆற்றல் பயன்படும் முறை : மனிதன் அணுவாற்றலைத் தன் நலத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது ? பிறநாடுகளில் இதுபற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய வாழ்வில் இயந்திரங்களை இயக்கவும், தானோடிகள் இயங்கிச் செல்லவும் நமக்குத் தேவையான ஒளியையும் வெப்பத்தையும் மண்ணெண்ணெய், நிலக்கரி, மலையினின்று இழிந்துவரும் நீர் முதலியவற்றிலிருந்து அடைகின்றோம். மண்ணெண்ணெய், நிலக்கரி ஆகிய எரியைகளை எரிப்பதால் நமக்கு ஆற்றல் கிட்டுகின்றது. நமக்கு வேண்டிய ஆற்றலெல்லாம் பெரும்பாலும் மின்சார உருவத்திலேயே பயன்படுகின்றது. நிலக்கரியை எரித்து அதில் வெளியாகும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி மின்னாக்கப் பொறிகளை19 இயக்கி அவற்றின் மூலம் மின்சாரத்தைப் பெறுகின்றோம். இதில் வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகின்றது. இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களில் பயன்படும் மின்னாற்றலை இம்முறையில்தான் தோற்றுவிக்கின்றனர். நிலக்கரிக்குப் பதிலாக பெட்ரோலியம்20 போன்ற மண்ணெண்ணெய்களை எரித்தும் மின்னாக்கப் பொறிகளை இயக்குவதுண்டு. கப்பல்களில் இம்முறை மேற்கொள்ளப்பெறுகின்றது. இதைப்போலவே, அணுவாற்றலையும் மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

இன்றுள்ள முக்கிய பிரச்சினை : அணு எரியைகளை20 ஏராளமாக உற்பத்தி செய்து அவை தொழிற்சாலைகள், நகர


19மின்னக்கப் பொறி - dynamo. 20பெட்ரோலியம் - petroleum. 21 அணு எரியை - atomic fuel.