44
அண்ணாவின் ஆறு கதைகள்
என்று பாமா கூறி முடிப்பதற்குள், சாஸ்திரிகள், “அடி பாவி! குடி கெடுத்தாயே! நான் என் செய்வேன், கமலா! என்ன வேலையடி செய்தாய்?” என்று ஓவென அலறினார்.
“ஒன்றுமில்லை! பயப்படாதே கமலா! உங்க அப்பா, சீர்திருத்தத்தைக் கண்டு பயந்து அலறுகிறார். அவ்வளவுதான். கொஞ்சநேரம் சென்று சரியாகிவிடும். சட்டப்படி உன்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமா கூறினாள்.
பக்கத்து அறையின் கதவை, படேர் படேர் என உதைத்தார் சாஸ்திரிகள், “நாசகாலப் பெண்ணே, திற கதவை, நாதஸ்வரக்காரனைக் கட்டிக்கொண்டாயா? இதற்குத்தானா நாள் தவறாமல் நீ சிவன் கோயிலுக்குப் போனாய்? நாசமாய்ப் போனவளே! எங்காவது குளத்திலே, குட்டையிலே விழுந்து சாகக்கூடாதா? கொண்டு வந்து வைத்தாயே என் குடும்பத்தில் கொள்ளியை” என்று கோவென கதறினார்.
“சாஸ்திரியாரே சாந்தமடையும். எல்லாம் ஆண்டவன் செயல்” என்றாள் பாமா. “போதுமம்மா, உன் பேச்சு. நீ ரொம்ப நல்லவள். பிறந்தாயே இந்த ஊரில் என் குடி கெடுக்க” என்றார் சாஸ்திரியார்.
“ஓய் சாஸ்திரியாரே, உமது மகள் செய்ததில் என்ன தவறு கண்டுவிட்டீர்? அவள் வேறு ஜாதியானை மணந்து கொண்டதற்காக இங்கு மல்லுக்கு நிற்கிறீரே, உமது சங்கதி என்ன? கமலாவுக்குத் தெரியாது — எனக்குமா தெரியாது என்று எண்ணுகிறீர்? எங்கள் சங்கத்து வேவுகாரரிடம் உமது ‘ஜாதகம்’ அத்தனையும் இருக்கிறது. பேசுவது வேதம், வேதாந்தம்! வேஷமோ சனாதனம், நடத்தை எப்படி? ஏன் சாஸ்திரிகளே! உமது வைப்பாட்டி வள்ளி யார்? எந்த இனம்? சொல்லட்டுமா கமலாவுக்கு!” என்று கோபத்துடன் கேட்டாள் பாமா. சாஸ்திரியார்,