பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அண்ணாவின் ஆறு கதைகள்



தம்பதிகளை ஆசீர்வதிக்கும்படி கலியாணப் பத்திரத்திலே எழுதியிருந்தது. தாயம்மாள் “அடபாவி! என் குடியைக் கெடுத்தானே” என்று சபித்தாள்.

“ஏண்டி ! தடிக்கழுதே அவனைத் திட்டுகிறே” என்றார் கண்டிராக்டர்.

“அன்னம் மூணு மாசம் ஆச்சு தலை முழுகி.”

“அப்படியா? அவனா?”

"ஆமாம்! அன்று அழைத்து வந்தாயே? அன்று அன்னத்தை சரிப்படுத்திவிட்டான். இந்தப் பைத்தியக்காரப் பெண்ணும் இடம் கொடுத்துவிட்டு இப்போது முழிக்குது.

“ஒரு நல்ல இடமாகப் பார்த்து முடிப்போம் என்று நினைச்சேன். மூணு மாசமா?”

“அதோ கேக்கலையா, அவ வாந்தி எடுக்கிற சத்தம்?”

ஆமாம்! அன்னம் கரு நோயினால் வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தாள். தாயின் வழி மகளும். ஆடவரின் காம உணர்வும், கட்டுப்பாட்டுக்காகக் காதலைக் கருக்கும் உள்ளமும், விபசாரிகளை உண்டாக்குகிறது! தாயம்மாளும், அன்னமும் அதற்குச் சாட்சிகள். ஆனால் உத்தமர்கள் வாழும் இந்த உலகிலே, அந்த ஊமைகளின் கண்ணீரைக் காணவா போகிறார்கள்? இப்போது தாயம்மாளின் பிரார்த்தனை “காளி நல்லபடியாக ஒரு குறையும் வராமல் என் மகள் பிரசவிக்க வேண்டும்” என்பதுதான்! என் மகளைக் கெடுத்த பாவி தலையிலே இடிவிழச் செய்” என்று காளியிடம் தாயம்மாள் முறையிடவில்லை. தனக்கு அதுபோல நேரிட்டபோது முறையிட்டு என்ன பலன் கண்டாள், பாபம்!