12
அது ஒலித்துக் கொண்டிருக்கும் வரை மதுக்கடை ஒன்று கூடத் திறக்கப்படுவதை நான் அனுமதியேன்.
மதுக் குடியில் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். அந்தத் துன்ப துயரங்களை என் போன்றவர்கள் அறிவோம்.
இன்று என் மகனைப் பார்த்து மகனே கள்ளுக்கடைகளில் என்ன நடக்கும் தெரியுமா என்றால் தெரியாதென்று விழிக்கிறான்.
மதுவின் கொடுமையையே அறியாத ஒரு புதிய தலை முறையை நாம் வளர்த்திருக்கிறோம்! இதை நாம் மறப்பது கூடாது. இத்தகைய ஒரு அருமையான தலைமுறையை-புதிய சமுதாயத்தை இழக்கச்சொன்னால் அது ஒரு நாளும் நடவாது.
எனது நண்பர் ஒருவர்-மதுப்பழக்கமற்ற உண்மை நண்பர் என் மீதுகொண்ட அன்பினால் மதுக்குடியை அனுமதித்தால் தமிழக அரசு டில்லியிலிருப்பவர்களிடம் உதவிகேட்கும் சங்கடத்திலிருக்க வேண்டியிராது—அதன் வருவாய் கணிசமாக உயரும் என்று தெரிவித்து எனக்கு எழுதியிருந்தார்.
அவர்கள் என்ன தான் உள்ளபூர்வமாகச் சொன்னாலும் அவர்கள் மதுவின் தீமையை உணராதவர்கள். மதுக்குடியால் சீரழிந்த குடும்பங்களின் துயரத்தை அறியாதவர்கள்.
நெடுங்காலத்துக்கு முன்பே தமிழகத்தில் மதுக்குடி ஒழிப்பு இயக்கக் கூட்டங்களை நடத்தியது நீதிக்கட்சி. அந்தக் கட்சியைச் சார்ந்தவனாக நான் இருந்தேன் என்பதை எண்ணி இந்த ஒரு கணம் நான் மகிழ்கிறேன் — அப்போது அந்த இயக்கத்தின் பேச்சாளர்களாக இருந்தவர்கள் பின்னர் காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் சேர்ந்து சிறப்பை அடைந்தார்கள்.