பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

கலைத் துறையினரின்
கனிந்த உதவி

நாட்டிற்கு ஏதாவது இன்னல்கள் வந்தாலும் மக்கள் துயர் பட்டாலும் கலைத்துறையில் உள்ளவர்கள் தட்டாமல் தயங்காமல் உதவி வந்திருக்கிறார்கள். அவர்கள் உதவுவது மட்டுமல்ல, பொது மக்களிடமிருந்தும் நிதி திரட்ட உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

கலைத்துறையினருக்குள்ள வள்ளல் தன்மையையும் இன்னலுற்றபோது உதவும் ஈகைத் தன்மையையும் பாராட்டும் அதே நேரத்தில் அந்தத் துறைக்கு வருவாயும் இருந்திட வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்.

“அரசாங்கம் எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவர்கள் நாணும்படி நாங்கள் நன்மை செய்து வந்திருக்கிறோம்" என்று திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் பழைய கதையின் கடைசி அத்தியாயத்தைப்பற்றி குறிப்பிட்டதாகத்தான் தோன்றுகிறதே தவிர புதிய கதையின் முதல் அத்தியாயத்தை அல்ல!

தொடர்ச்சியாகச் செய்துவரும் எந்தக் காரியத்தையும் திடீரென்று இடையில் புகுந்து எதுவும் செய்துவிட முடியாது. அது திரைப்படத் துறையினருக்கு தெரியும். ஆயிரம் அடி எடுத்த படத்தை இன்னொருவர் பொறுப் பேற்றுச் செய்வதென்றால் எத்தனை ஆயிரம் அடி நீக்கவேண்டிவரும்? வில்லன் கதா நாயகன் ஆவானா? கதா நாய்கன் வில்லன் ஆவானா? என்பதெல்லாம் நிலைமைக் கேற்பத்தான் மாறும். இதுபோல இடையிலே வந்திருக்கும் நாங்கள் எதையும் ஒரேயடியாக மாற்றிவிட முடியாது. ஆனால்; படிப்படியாக மிகுந்த அக்கறையுடன் பிரச்சனைகளை கவனிப்போம்.