பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


கலைத்துறையில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்து இருக்கிறது. இசைத்துறையிலும் — நாடகத்துறையிலும் இலக்கியத்துறையில் எந்தத் துறையானாலும் முன்னணியில் தமிழகம் இருந்திருக்கிறது. கலைவாணர் போன்றவர்களால் மேலும் வளர்ந்திருக்கிறது.

கலைவாணரின்
நினைவு...

கலைவாணர், நகைச்சுவையின் மூலம் கருத்துக்களை மக்களுக்கு இனிய முறையில்--எளிய முறையில் உணர்த்தினார். மேலும் பலர் அந்தத் துறையில் ஈடுபட்டுவருகிறார்கள். என்றாலும் அதைப் பார்க்கிறபோது கலைவாணருடைய நினைவு தான் நமக்கு வருகிறது.

நமது தமிழ் நாட்டில் கலைத்துறையில் இருப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மீதி பத்துப் பேரில் ஒருவர் இருவர் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கலைவாணர். அதனால் தான் இறந்த பிறகும் புகழப்படுகிறார்.

நெல்மணிகள் முற்றியதும் கதிர் சாய்வதைப் போல — எங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுவது போல் — கலைவாணர் வாரி வாரி வழங்கினார். பணத்தை மட்டுமல்ல — நல்ல கருத்துக்களையும்.

பிறருடைய கலைவளர்ந்து இருப்பதைப் பார்த்துப் பாராட்டுகின்ற பண்பு அவருக்கு உண்டு.

பொதுப்பணியிலும் கலைவாணர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறார்.

எனக்குத் தெரிந்த வரையில் முதன் முதலாக சோவியத் நாட்டுக்குப் போய் வந்த கலைஞர் என்.எஸ்.கே.தான். அவருடைய கிந்தனார் காலட்சேபம் எல்லோருக்கும் பிடித்தமானது. அவருடைய நகைச்சுவை இப்போதும் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவுக்கு இருக்கிறது. கலைக் கல்லூரி அமைத்து ஆசானாக இருந்து பணியாற்ற வேண்டியவர் அவர்.