பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


கேளிக்கை
வரி

கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட முதலாளிகள் கோருகிறார்கள். அவர்கள், வரிகளின் நிலைமை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாநில அரசுக்குரிய வரிகளில் முதலாவது நிலவரி; நிலவரி வளரக் கூடியது அல்ல—ஏனெனில் நிலம் வளரக் கூடியது அல்ல; எனவே அந்த வரி—வளராத வரி! அதனாலேயே அந்த வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் இருக்கின்றன.

இரண்டாவது விற்பனை வரி ; விற்பனை வரி வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டாலும் அந்த வரியின் பளு வாங்குபவரின் தோளின் மீது தான் விழும். ஆகவே அந்த வரியை அதிகப் படுத்துவது வாங்குவோரைக் கொடுமைப் படுத்துவதாகும்.

கேளிக்கை வரியும் படம் பார்ப்போரின் மீது சுமத்தப்படுவது ஆகும்.

மீதியிருக்கும் வருமான வரி போன்றவை மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது.

வரி அல்லாத வருமானங்களை எடுத்துக் கொண்டால் தொழில்கள் சில தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கிறது.

இந்த மாநிலத்திலுள்ள பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று— நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை. அதுவும் மத்திய அரசாங்கத்திடம்!

பெரம்பூர் கோச் பேக்டரி - திருச்சி பாய்லர் தொழிற்சாலை போன்றவையும் மத்திய அரசாங்கத்திடம் தான்!

மாநில அரசாங்கத்திடம் இருப்பதெல்லாம்-ஒன்று-பஸ் போக்கு வரத்துத் தொழிற்சாலை! சென்னை நகரத்தைப் பொறுத்தவரை அது நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.