பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகுப்புரை

குன்றிலும் கடலிலும் சிப்பியின் வயிற்றிலும் பாறையின் இடத்திலும், இன்னும் எங்கெங்கோ காணப்படும் ஒன்பது வகை உயர்மணிகள் நவரத்தின மாலையாக மாறிவிடுகிறது.

தூய வெண்மை நிறம் - மரகதப் பச்சை நிறம்-செந்நிறம்- இளஞ் சிவப்பு நிறம்- இப்படி பல வண்ணங்களில் மலர்கின்ற பல்வகை மலர்கள் கதம்ப மாலையாக உருமாறி விடுகிறது.

அதுபோல, தமிழகத்து முதல்வர் — தமிழினத்தின் தலைவர் காக்கும் கரங்களினால் தமிழகத்தைக்காக்கத் தொடங்கிய பிறகு - மொழிந்த ‘திருவாசகம்’ நம்மையெல்லாம் - நம் உள்ளத்தை எல்லாம்- உலகை எல்லாம் உருக்கும் அருள்வாசகமாக விளங்குகிறது. அந்த வாசகங்களில் சிலவற்றை சொல்மாலையாக்கி - சொல்லாரம் என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன். சொல்லாரத்தின் மணம்- தமிழ் மக்களின் மனத்துக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் இனிமை பயக்கும்.

அறிவுக் கருவூலத்தை அவனிக்கு அளித்து அறிஞர் துதிக்கப்படவேண்டியவர்.

அவர்தம் கருத்துக்களை மாலையாக்கித் தருகின்ற அரும் பணியை என்னிடம் ஒப்படைத்த என் உயிர் நண்பர் கே.ஆர். நாராயணன் என்றும் என் நன்றிக்கு உரியவர்.

அன்பன்,
தமிழ்ப்பித்தன்