பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியாரால்
லாபம் அடையாதவன் நான்

ராமலிங்க அடிகள் வாழ்க்கைக்கும் காந்தி அடிகள் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நாட்டில் இல்லாத கருத்துக்காக நாம் எந்த நாட்டிலும் - எந்த மொழியிடத்திலும் கடன் வாங்காத அளவுக்கு இங்கே கருத்துக்குவியல் உண்டு.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மொழிக்கு இலக்கணம் வகுத்து, இல்லறம் எப்படி இருக்கவேண்டும், துறவறம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எல்லாம் நம்மிடத்திலே கருத்துக் குவியல் நிரம்ப உண்டு,

பாங்கிகளுக்கெல்லாம் தலைமை பாங்கியான ரிசர்வ் பாங்கியில் பணம் நிரம்பி இருப்பதைப்போல நம்மிடத்தில் கருத்துக் குவியல் நிரம்ப உண்டு. ரிசர்வ் பாங்கி முன்னால் நின்று கொண்டு ஆகா எவ்வளவு பணம் இருக்கிறது என்று வயிற்றை தடவினால் பசி நீங்காது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தின் அளவுக்குத்தான் பசி நீங்கும்.

நம்மிடம் ஏராளமான கருத்துக்கள் இருந்தும் நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம்? அதைத்தான் நாம் ஆராயவேண்டும் இதைச் செய்வதால்தான் என்னை அழுக்கானவனாக அருவருக்கத்தக்கவனாக சிலர் நினைக்கிறார்கள். விரலில் போட்டுக்கொள்கிற மோதிரம் காணாமல் போய்விட்டால், சேற்றிலே விழுந்து விட்டால் தேடி எடுக்கும்போது கையிலே சேறு ஒட்டிக்கொள்ளும். அதனால் சேறு என்று ஒதுக்கிவிட முடி யாது. யாராவது அவர்களைப் பார்த்துச் சேற்றிலே இருப்பவன் என்று சொன்னால் அவர்கள் எண்ணத்திலே இருக்கிற சேற்றுக்கு நாம் பரிதாபப்பட வேண்டும். அந்தச் சேற்றை நீக்குவது எப்படி என்பதில் நாமெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.