பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

 செல்வமோ செழிப்போ மக்களால் உணரப்பட வேண்டும். உழைக்குத் தொழிலாளிக்கு உரிய பங்கினை அளித்திட வேண்டும். இவை மறுக்கப்படுகிற எந்த ஓர் அமைப்பையும் முறையையும் உலகம் வரவேற்காது என்பதோடு பொறுத்துக் கொள்ளவும் மாட்டாது. அத்தோடு அம்மாதிரி ஒரு முறையை இன்று நம்மால் தாங்கிடவும் முடியாது. அத்தகைய முறை நிலவுமானால், தொழில் உலகம் துருப்பிடித்து கேட்பாரற்று ஒதுக்கப்படும். உழைக்குத் தொழிலாளிக்கு உரியதை வழங்கிடுங்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக எம்போன்ற எளியாருக்கு ஏற்படுகிற சங்கடத்திலிருந்து விடுதலை கொடுங்கள்.

இந்நாட்டைத் தொழில் வளமுடையதாக ஆக்கும் முயற்சியில் தவறுகளைச் செய்திருக்கிறோம். அவற்றைத் திருத்திக்கொண்டு செயல்படுவோம். "கட்டை வண்டி நிலையிலிருந்து ஜீப் நிலைக்கு நாம் முன்னேற வேண்டும்” என்று ஒரு முறை நேரு சொன்னார் மக்கள் அந்தநிலையை அடைந்தார்களோ இல்லையோ அதிகாரிகள் ஜீப்புகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேளாண்மைத் துறையை வலிவடையச்செய்வதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். தளராது உழைத்து, அதை வலிவுடையதாக ஆக்கி விட்டோமானால், நம் தொழில்களுக்குத் தேவையான மூல தனத்துக்கு எவரிடமும் உதவி நாடி நிற்கத் தேவையில்லை. வேளாண்மை மக்களே உதவிட முன்வருவார்கள். தொழில் முயற்சிகளில் பங்கு தாரர்களாகச்