உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

சோழனுக்கு, இராஜேந்திர சோழன் மகன்’ என்று சொல்வாருமுண்டு. ‘தம்பி’ என்பாரும் உண்டு என்றிருக்கும்.

“கரிகால் வளவன் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை” என்பாரும் உண்டு. “இல்லை” என்பாரும் உண்டு என்று இப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பணியில் ஈடுபட்டு, ஆராய்ச்சி நடத்திடப் பல்வேறு அலுவல்களைக் கொண்டுள்ள என்னால் முடியாது. வரலாற்று ஆசிரியர்கள்தாம், இந்தப் பணியை மேற்கொண்டு உண்மையான தமிழ் வரலாற்றை உருவாக்க வேண்டும்.

கல்வெட்டுக்களில் காணப் படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளதையும், இன்ன பிற சான்றுகளைக் கொண்டும், தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது, அதற்குள், இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளி நாடுகளிலிருந்து வருபவர்க்கு, ‘இதுதான்’ எங்கள் நாட்டு வரலாறு என்று எடுத்துக் காட்ட முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களைப் பற்றியும், ஆறுகளைப் பற்றியும் வரலாறு இல்லை. இந்த வரலாற்றை எல்லாம் தொகுக்கின்ற பணியில், திரு.ஆர்.பி. சேதுப் பிள்ளை ஆர்வங் காட்டினார். ‘அவருடைய பணி ஆகாது’ என்று கருதியோ, என்னவோ காலம் அவரை அழைத்துக் கொண்டு விட்டது.