63
யாராவது தாறுமாறாக நடந்தால், வழக்கத்திற்கு மாறாக நடந்தால் கூட, ‘என்ன குடித்திருக்கிறாயா?’ என்று கேட்பதுதான் நம் வழக்கம்.
நம் திரைப்படங்களில் கூட, ஏன் நாடகங்களில் கூட நீங்கள் கவனித்திருக்கலாம். கதாநாயகர்கள் குடிக்க மாட்டார்கள். கயவனாக வருபவன்தான் குடிப்பதாகக் காட்டப்படுவான். இவ்வகையில், நம் கதை ஆசிரியர்கள் கூடப் பாராட்டப்பட வேண்டியவர்கள். கதைகளில், குடிப்பது தகாத செயலாகவே காட்டப்படுகிறது.
நல்லவர்கள் குடிப்பதில்லை. குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர். நல்லவர்களும் குடிக்கும் போது கெடுகிறார்கள். இந்த உண்மையை அனைவரும் உணர்கிறார்கள். ஆனால், நடைமுறையில்தான் சிலர் தவறுகிறார்கள், உண்மை உணரப்படுகிறது. ஆனால், நடைமுறைக்கு அது வரக் கடினமாக இருக்கிறது.
மனிதருள் பெரியவராக இருந்த காந்தியடிகளே ‘உண்மையிடம் வெற்றி கண்டதாக’க் கூறவில்லை. உண்மையிடம் வாய்மை ஆய்வு நடத்தியதாகத்தான் சொல்லி இருக்கிறார். அந்த மேதைக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. எனவேதான், ‘மதுப் பழக்கம் தீது’ என்ற உண்மை தெரிந்திருந்தால் கூட, அதனை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் தேவைப்படுகிறது.