64
இன்று காலையில் கூட, எனக்கு வந்த கடிதங்களில் ஒன்று, இச்சிக்கல் பற்றி என் நண்பர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். அவர் குடித்தவர் அல்லர். குடிப்பவரும் அல்லர். இனியும் குடிக்க மாட்டார். ஆனாலும் அவர், “ஏன் ஒவ்வொரு முறையும் நிதி வசதி வேண்டித் தில்லியின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? கள்ளுக் கடைகளைத் திறந்து விடுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும்” என்று எழுதி இருந்தார். மதுவிலக்குக்காக வாதாடுங் குணம் படைத்த அவர், பொருளாதார நிலைமை காரணமாக, எனக்கு இந்தக் கருத்தேற்றத்தை எழுதியிருந்தார். ஆனால், அவரும், அவரைப் போன்றவர்களும் இப்போது வளர்ந்து வரும் இளைய பரம்பரையினரை மறந்து விடுகிறார்கள்.
“மது என்றால் என்ன? மதுக்கடை எப்படி இருக்கும்?” என்று தெரியாமல் இருந்து வருபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இவை இரண்டும் மீண்டுந் தெரியத்தான் வேண்டுமா? மீண்டும் நம் இல்லங்களில் அழுகுரல் கேட்கத்தான் வேண்டுமா? தாய்மார்கள் வேதனையால் தவிக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்லுங்கள்.
மதுவிலக்கினைச் செயல்படுத்துதில் சில குறைபாடுகள், இயலாமைகள் இருக்கலாம். “தேவாலயத்தினுள் நுழைந்து வருபவர்கள் எல்லாம் பத்து கட்டளைகளின்படி நடப்பவர்கள் அல்லர். அவர்களையும் அறியாமல், வழுவல்கள் இருக்கலாம். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பத்துக் கட்டளைகளின் படி நடப்பேன்” என்று உறுதி மொழி கூறத் தவறுவதில்லை.