உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நம்முடைய நாட்டிலே கூட, அந்நிய நாட்டினுடையவை என்பதற்காக எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் அல்லர், இங்குள்ள தலைவர்கள். அந்நியக் கடன்கள் அவர்களுக்குப் பிடிக்கும்; அந்நியத் தொழில் நுணுக்க அறிவு பிடிக்கும்; அந்நிய நடையுடை பாவனைகள் பிடிக்கும். மொழியைப் பற்றி வரும் பொழுது மட்டுந்தான் அவர்கள் மாறி விடுகிறார்கள்.

இங்கே பல்வேறு நாகரிகங்களின் சுவடுகள் பதிந்துள்ளதைக் காணலாம். ஆங்கில நாகரிகம் உட்படப் பல நாகரிகங்களும் சேர்ந்து, இன்றைய இந்திய நாகரிகத்தை உருவாக்கியுள்ளன.

ஒருமைப்பாடு என்பது உளப்பூர்வமாக உருவாக வேண்டும்; மொழியால் அல்ல.

இந்நாட்டை ஒன்றுபடுத்த, இந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக் கதையாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்தி எதிர்ப்பு இயக்கம் துவக்கப்பட்ட போது, தேசியத்தையும் ஏன், இந்தியா முழுவதையுமே எதிர்ப்பதற்குச் சமமாக அது கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தி பேசும் பகுதிகளுக்குக் கூடச் சென்று இந்தியைத் தாராளமாக எதிர்க்க முடியும்.

நாட்டிற்குள் பல்வேறு பகுதிகளுக்கிடையே தொடர்பு கொள்வதற்கு ஒரு மொழியும், வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு வேறொரு மொழியும் வேண்டும் என்று சொல்வது அரசியல் அதிகப் பிரசங்கித்தனமாகும்.