74
இராமசாமிக்கு ஆறுதலும், மாறனுக்குப் பாராட்டும் தெரிவித்த வாசன் அவர்களின் திறமை பாராட்டத் தக்கது.
மாறன் வெற்றி பெறுவார் எனத் தெரிந்தும் கூட, இராமசாமிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று அவர் துணிவாகக் கூறியதைக் கண்டு மகிழ்கிறேன். மாறனுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று இப்போது கூறுகின்ற சிலரது கூற்றை ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாங்கள் அரசியல் அனுபவம் பெறாமலில்லை! அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்காமல், மாறன் முன்னேற வேண்டும் என்று உளப்பூர்வமாக வாழ்த்தியவர்களுக்கு என் நன்றி.
இங்கே சில நண்பர்கள் “கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா?” என்னும் வாதம் பற்றிக் கூறினார்கள். “அரசியல் என்பதே ஒரு கலைதான்” என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. “அரசியல் ஒரு கலையா? அல்லது வெறும் கருத்துக் குவியலா?” என்று ஆராய்ந்த பேரறிஞர்கள், “அரசியல் என்பது கருத்துக் குவியல்களின் வழி மக்களைத் திருப்பி, அவர்களைத் திருத்தும் ஒரு கலை,” என்றே முடிவு கட்டியிருக்கிறார்கள்.
கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத்துவது. கலை என்பது நிழல் உருவில் இருப்பது;