83
தமிழ் மொழி பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளையும், முடிவுகளையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாடு, உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும், தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். தன்னிடம் வருபவர்களை வாழ்த்தி வரவேற்கும். எந்த மொழியையும், உரிய முறையில் மதிக்கும். அறிவுச் செல்வம் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும், தேடிச் சென்று எடுத்து வரும். ஆனால், தமிழர்கள் தமக்கென்று உள்ளதை ஒருக்காலும் இழக்க உடன்பட மாட்டார்கள்.
இங்கிலாந்திலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் வரும் நிபுணர்கள் தமிழ்மொழி இத்தகைய அருமையான மொழி என்று கூறுகிற நேரத்தில், அந்த மொழிக்குச் சொந்தக்காரர் என்று நினைக்கும் பொழுது, அந்த மொழி மீது பற்றும், பாசமும் ஏற்படாமலா இருக்கும்.
அத்தகைய மொழிக்கு எந்தக் காலத்திலாவது, எந்த நோக்குடனாவது, எப்படிப்பட்டவர்களிடமிருந்தாயினும் தனி மரியாதை கிடைக்கவில்லை என்றால், அதைத் தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.
ஆழ்கடல் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பக்குவமாகக் கடக்க வேண்டுமானால், நல்ல நாவாயின் மூலம் கடக்கலாம். அது போலத் தமிழர்களை அணைத்துக் கொண்டு சென்றால், அவர்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.