பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. எங்கிருந்தாலும் ஆற்றுக சமூகப்பணி!


இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களை எல்லாம் பாராட்டி விட்டுப் போகலாம் என்பதற்காக மட்டும் நான் வர வில்லை. இச்சமூகப் பணிப்பள்ளியின் அமைப்பாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துச் செல்லவும் வந்திருக்கிறேன்.

கிளப்வாலா ஜாதவ் அம்மையாரால் தோற்றுவிக்கப் பட்ட இந்த நிறுவனம் சீரிய முறையில் செயல்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு

நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. சமுதாயப் பணிகளிலும் தொண்டுகளிலும் இளைஞர்கள் காட்டும் அக்கறையும் மேற்கொள்ளும் பொறுப்புக்களும் நாட்டின் வாழ்வை மலரச் செய்யும்.

சமுதாயச் சீர்திருத்தம் வேறு. சமூகச்சேவை வேறு. சமுதாயச் சீர்திருத்தம் சில எதிர்ப்புகளைத் தேடித்தரும். ஆனால் சமூகச் சேவை அப்படிப்பட்டதல்ல.

நம் நாட்டு மீது விடுக்கப்பட்டிருக்கும் அறை கூவலை எதிர்த்துப் பணியாற்றுவதில் இளைஞர்களுக்கு முக்கிய இடமுண்டு.

நம்முடை நாடு பிற்பட்ட நாடல்ல. தனிப்பட்ட வீறுடைய நாடாக விளங்குகிறது தத்துவத்தில் சிறந்த நாடாக உள்ளது. இருந்தாலும் இங்குக் கல்லமையும் அதிகமாக இருக்கிறது.