இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுத்தாலே புரட்சியூட்டி, வீழ்ச்சி யுற்ற
இனமொன்றை எழுச்சிபெறச் செய்து காட்டி'
அழுத்தாமல், மேன்மேலும் கொடுமைக் காரர்
அகலுமாறு பக்குவமாய்ப் பதப்ப டுத்திக்,
கழுத்தின்மேல் கத்திபோலக் காத்தி ருக்கும்
கயவரது முகத்திரையைக் கிழித்துப் போட்டுப்,
பழுத்துவரும் இனவுணர்வை, உரிமை வேட்கைப்
பண்பாட்டைக் காத்தவர்நம் அண்ணா அன்றோ?
இவரெழுத்தால் மருட்சியுற்ற ஆட்சி யாளர்
இவர்நடத்தும் 'திராவிடநாடு' இதழின் மீது
தவறெனவோர் குற்றத்தைச் சுமத்தி னார்கள்!
தக்கதொரு பொறுப்பீட்டுத் தொகையாம் என்றே
அவர் நினைத்த மூவாயி ரத்தைக் கட்ட
ஆணையிட்டார்! வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம்
உவகையுடன் செலுத்தியபின், வேண்டா மென்றே
உயர்நீதி மன்றத்தார் திரும்பத் தந்தார்.