இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சென்னைக்குக் கல்லூரிப் படிப்பிற் காகச்
சேரவந்த அண்ணாவும் நாற்ப தாண்டாய்ச்
சென்னையையே மிகவிரும்பித் தங்கி விட்டார்!
தேர்தலிலே நின்றுள்ளார்: தொழிற்சங் கத்தில்
முன்னவராய்ப் பணிபுரிந்தார்; இந்திப் போரில்
முதன்முறையாய் இங்கேதான் மறியல் செய்தார்!
சென்னையிலே தெரியாத இடமும் இல்லை;
சேரிகளில் அறியாத மக்க ளில்லை!
ஆங்கிலத்தில் முழுவதையுங் கற்றும், அந்நாள்
ஆங்கிலப்பேச் சாளருக்கே மதிப்பிருந்தும்,
ஆங்கிலத்தில் என்றேனும் பேசி னாலும்,
அஃதுமொரு வரலாறாய் அமைந்தி ருக்கும்!
பாங்குமிகும் மொழிப்பற்றால் தமிழில் மட்டும்,
படித்தவரும் பாமரரும் மெச்சு மாறு
வீங்குபுகழ்ப் பேச்சாளர் எனவி ளங்கி -
வெற்றிபெற்றார்! அவர்உரையைக் கேளார் உண்டோ?