செந்தமிழ்ப் பெரியோன் சீர்வள் ளுவனின்
பிறப்பும், வளர்ச்சியும், சிறப்பாய் உணர்ந்திலோம்!
அறப்பால், பொருட்பால், இன்பத் தின்பால்...
இத்துணை அருமையாய் இயற்றியோன் பற்றி
எத்துணை அறிவோம்? ஏதும் அறிகிலோம்!
நற்பே றாகப், பொற்புமிகு பாக்கள்
அற்பரால் அழியா திருந்தன! கற்பவர்
தமிழராய் மட்டும் தனித்திடா வண்ணம்,
இமிழ்கடல் உலகின் ஏராள மொழிகளில்
ஆக்கினர் நல்லோர்! அறிவு கமழ்க்திடத்
தேக்கிய தொண்டினால் திருக்குறள் வாழ்ந்தது!
வள்ளுவன் காட்டிய வாழ்வு நெறிதனைத்
தெள்ளு தமிழில் தீங்கற உணர்ந்தோர்
மக்கட் தொகையில் மிக்க சொற்பமே!
தக்க வழிகளில் தாங்கிப் பரப்பிட
முனைப்பும்,முயற்சியும், நினைப்பும், நேரமும்
இனிப்பாய் எண்ணமும், ஈடேற்றச் செயலும்
பாமரர் அறியப் பக்குவச் சொல்லும்,
தாமறிந் ததெலாம் தமிழர்க் குரைத்திடும்
தண்ணளி சுரக்குந் தகைசால் மனமும்
எண்ணிலா ஆண்டுகள் யார்க்கும் இல்லைேயே