இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அற்புதங்கள் நிகழவில்லை! ஆகா யத்தில்
அதிசயமாய்ப் புதியவொளி தோன்றிற் றென்று
கற்பனையாய்க் கவிஞருமே பாட வில்லை!
கதைக்கின்ற பண்டிதர்க்கு வேலையில்லை!
பொற்புடைய காஞ்சிமண்ணின் பெருமை மேலும்
பொலிவடைய, வலிவிழந்த தமிழ கத்தின்
நற்பயனாய், நடராசன்-பங்கா ரம்மாள்
நயந்தபடிப் பிறந்ததேஓர் ஆண்கு ழந்தை!
செம்புடம்புச் சிலைவடிவு பெற்ற பிள்ளை
சிறப்பாக இத்திங்கள் பிறந்த தாலே -
எப்புதுமை செய்ததெனப் பின்னால் கண்டோம்!
இருக்கின்ற பன்னிரண்டு திங்க ளுக்குள்
இப்புகழைப் பிறிதொன்றும் அடைய வில்லை!
எழில்தமிழர் விழாவெடுக்க ஏற்ற தாக
ஒப்புரைக்க இயலாத உரைவோன் தன்னை
உலகுக்கு வழங்கியதே நிலவு போலே!