இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சிச்
சிறப்பான மாநாட்டில் அண்ணா பெற்ற
சீலத்தால் புரட்சிமிகும் தீர்மா னங்கள்
சிலவற்றைக் கொணர்ந்து, பெரு மாற்றம் கண்டார்!
காலத்துக் கொவ்வாத பதவி, பட்டம்
காற்றோடு விடவேண்டும்; கட்சிப் பேரை
ஞாலத்தில் திராவிடர் கழகம் என்றே
நவிலவேண்டும் எனஇயற்றி, வென்றார் அண்ணா!
பட்டங்கள் பதவிகளைப் பெரிதாய் நம்பிப்
பகல்வேடந் தரித்திருந்த சிலரை இந்தத்
திட்டங்கள் தடுமாறச் செய்த தாலே,
சீற்றமுடன், ஏற்காமல், எதிர்த்தும் பார்த்தார்!
சட்டங்கள் ஆக்கவல்ல மக்கட் கூட்டம்
சரியாத பேரார்வம் காட்டி, அன்னார்
கொட்டத்தை அடக்கிடவே முனைந்து நிற்கக்,
குறைவின்றி முகிழ்த்ததுநம் மக்கட் கட்சி!