இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலைவாழை இலைபோட்டு விருந்து வைத்த
தன்மைபோல் அறிவார்ந்த பசியைப் போக்கக்
கலைவாணர்-பாகவதர் இருவர் சேர்ந்து
கணித்தமிழின் புகழ்சமைத்து வந்த போது...
கலைவாழ்வில் தமிழரினம் தழைத்தல் கண்டு
காழ்ப்புணர்ச்சி கொண்டசில கயவர், தாமே
கொலைவாளை அவர் கையில் கொடுத்தாற் போலக்
குற்றவாளி ஆக்கிவிட்டார்! கொடுமை; அந்தோ!
பொங்கியெழுந் தார் அண்ணா! ஊர்கள் தோறும்
பொதுக்கூட்ட வாயிலாக நீதி கோரிச்
சங்கொலித்து முழக்கமிட்டார்! ஆங்கி லேயச்
சரித்திரத்தில் கறைபடிய வேண்டாம்! என்றார்.
இங்கிருவர் இல்லாத குறையை நீக்க
இளம்நடிகர் இராமசாமிக்கு ஊக்கம் தந்து
சங்கீத நாடகங்கள் நடிப்பதற்குத்
தஞ்சையிலே சபையொன்று நிறுவச் செய்தார்.