பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அண்ணா—சில நினைவுகள்


சாப்பிட்டு, நாடகம் பார்த்துவிட்டுத், திரும்ப வந்தபிறகும் தொடர்ந்து சீட்டாட்டம்!

“என்னண்ணா இது? துரங்க வேண்டாமா?’ என நான் இரங்கல் மொழியில் கேட்டேன். இனிமே துரங்கினா ரயிலைக் கோட்டை விட்டுவிடுவோம். இப்படியே கொஞ்ச நேரம் விளையாடினா, நேரே மறுபடியும் ரயிலடிக்குப் போயிடலாம். நீ விடிகிற வரைக்கும் என் பக்கத்திலே விழிச்சிக்கிட்டு இருந்தா, ஒனக்கு நாலணா இனாம்” என்று தன் தவற்றுக்கு ஒத்துழைக்க என்னிடம் பேரம் பேசினார் அண்ணா. “சரி வர்றதை விடுவானேன்” என்று பின்னால் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சீட்டாட்டம் எனக்குப் பிடிக்காத சங்கதி, எப்போதுமே! சம்பத்தும் நானும் ஏறக்குறைய செயின்ஸ்மோக்கர்கள் அப்போது!

“ஏனய்யா ரெண்டு பேரும் இப்படி ஒயாமெ சிகரெட்டெக் குடிச்சிக் கெட்டுப் போறீங்க?” என்று அண்ணா கடிந்து கொண்டார். நாங்கள் கேட்கவில்லை. ஊதிக்கொண்டுதான் இருந்தோம். அதன் பலனை இரு வருமே அனுபவித்தோமே! சம்பத் அற்ப ஆயுளில் போய் விட்டார். நான் 45 வயதில் சுத்தமாகப் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்பது மட்டுமல்ல; அருகில் யாராவது புகை பிடித்தால் - முடிந்தால் தடுப்பேன், அல்லது விலகிப் போய் விடுவேன்! அந்த அளவுக்கு சிகரெட் புகை எனக்கு வெறுப்பைத் தருகிறது இப்போது. ஆனால், குதிரை ஒடிப் போன பிறகு இலாயத்தை இழுத்து மூடியது போல, உடல் ஆரோக்கியம் கெட்டுப் போன பின்னர் இந்த ஞானோதயம் எதற்குப் பயன்படும்? என்னுடைய அறுபதாவது வயது தொடங்கியபோது தொண்டையில் பயங்கர நோய் வந்துவிட்டதே? காரணம் யாரும் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறதே? அண்ணா கண்டித்த போது கேட்காததுதான் காரணம் என்று!