பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

அண்ணா—சில நினைவுகள்


சொன்னதன் மூலம், என்னைக் காப்பாற்றினார்களே, அது போதும் எனக்கு.

என்னைப் பொறுத்தவரையில் நான் என்றைக்கும் சுயமரியாதைக்காரன். 1952 முதல் முழுமையாக தி.மு.க. கைத்தறியாடை அணியுமாறு அண்ணா பணித்தது முதல் வேறு ஆடை அணிவதில்லை. அஞ்சல் துறையிலிருந்த போதே நண்பர் G. லட்சுமணனும் நானும் கருப்பு சிவப்புக் கரைபோட்ட கைத்தறி வேட்டியும் அங்கவஸ்திரமும் எப்போதும் அணிபவர்கள்.

தி. மு. கழகத்தின் பொதுக் கூட்டம், மாநாடு, தேர்தல் போராட்டம் எதுவாயினும் உதவியோ பதவியோ எதிர் பாராமல் என் பங்கைச் செலுத்தி வருபவன். எந்த நேரத் திலும் எந்தப் பயனையும் நன்றியையும் எதிர்பார்த்த வனல்லன். வாழ்நாள் முழுவதும் அரசுச் சம்பளத்தில் வாழ்ந்தவன். திராவிடநாடு கொள்கை என் குருதியில் கலந்துவிட்ட ஒன்று. என் மூச்சும் பேச்சும் அதுதான் என்பதற்கு, என் பழைய கவிதைகளே சான்று!

அண்ணா 1963-ல் ஒரு தடவை சொன்னது மறக்க வொண்ணாதது. “ஏன்யா! திராவிடநாடு பொங்கல் மலரில் ஒரு கட்டுரை எழுதப்போறேன். அதற்காக நமது கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டத் தேர்ந்தெடுத்தேன். பொங்கல் விழா ஆகையால் பொதுவான வரிகளாயிருக்கட்டுமே என்று தேடினேன். கடைசியாக ஒன்றே ஒன்று கிடைத்தது. நீ ‘அத்தான்’ என்று தொடங்கினால் கூட, ‘ஆகையால் வேண்டும் திராவிடநாடு’ என்றுதான் உன் கவிதையை முடிக்கிறாய்” என்று கூறியது, என்பால் குறையல்லவே! என் நிறையே இதுதான்! அண்ணா தொடர்ந்து உரைத்தார்கள். இனி, சில கவிதைகளைப் பொதுவாகவும் எழுது!” என்று. அவ்வாறே அதற்குப் பின்னர் நிரம்ப எழுதியுள்ளேன்; அண்ணாவின் ஆணையை நிறைவேற்றுமுகத்தான்!