பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

169

கண்ணாடிப் பேழைக்குள் கண்ணைக் கவ்வும்
கணக்கற்ற பொன்னகைகள் இருக்கக் கண்டேன்!
எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி யெண் ணி
ஏங்குகின்றேன்; இருப்பவற்றை அணிந்து கொண்டால்
புண்ணான என்மனமோ ஆறும்; நானும்
புதிதாக அணிமணிகள் செய்யச் சொல்லிக்
கண்ணான கணவருக்குத் தொல்லை செய்யேன்!
காண்பதையே கேட்கின்றேன் தந்தால் என்ன?
நல்ல நல்ல பருப்புவகை நவதான் யங்கள்
நம் வீட்டில் ஏராளம் குவித்து வைத்தோம்;
நெல்லரிசி களஞ்சியத்தில் நிறைய வுண்டு;
நேற்றுமுதல் சோறில்லை, கஞ்சி யுண்டோம்!
பலவிதமாய் காய்கனிகள் தோட்ட மெங்கும்
பசுமையுடன் குலுங்குகையில் பறித்தா லென்ன?
இல்லையெனச் சொல் வீரோ, அத்தான்! இங்கே
இல்லாத பொருளெதையும் கோர வில்லை!
முப்புறமும் அரண் சூழ்ந்த காவ லுக்குள்
மூன்றடுக்கு மேன்மாடம் முகிலைத் தீண்டும்;
எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்றுக் கண்
ஈன்றெடுத்த தாய்போல அருள் சுரக்கும்;
ஒப்புரவாய், ஒற்றுமையாய், இனிது பேசும்
உடன் வாழ்வோர் கடல் மணல்போல் ஏரா ளம்பேர்!
அப்படியும் நடுமனையில் இடமில் லாமல்
அநாதையென நடத்துகின்றீர், ஏனோ அத்தான்?
உள்ளதைத்தான் கேட்கின்றேன்; இருந்தும் நீங்கள்
ஒன்றையுமே அநுபவிக்கத் தருவதில்லை;
உள்ளதெல்லாம் உண்மையுடன் உரைப்பீர்!” என்றே
ஊடிநின்ற துணைநலத்துக் கென்ன சொல்வேன்!
“உள்ளதைத்தான் கேட்கின்றாய்! ஆனால் கண்ணே,
உரிமைநமக் கெதிலுமில்லை, அடிமை யாகி
உள்ளதெல்லாம் பறிகொடுத்தோம்! உணர்வு பெற்றால்
உரிமையுடன் உலவிடலாம், உலகில்!” என்றேன்.