பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

11


பெட்டி பெட்டியாய் நகைகள், லாரி லாரியாய்ச் சாமான்கள், சீர்வரிசை திருமண போட்டோ ஆல்பத்தை என் துணைவியும் நானும் கணேசனும் பார்த்தபோது திகைத்துவிட்டோம். இவற்றுக்கு ஆசைப்பட்டு, முன்னரே காதலியுடன் குடும்பம் நடத்தியவன், யோக்கியன்போல் வேடமிட்டு, ஏமாற்றியிருக்கிறான். இந்தப் பெண் வந்த பிறகும் வீட்டு வேலைக்காரிகள், மாட்டுத் தொழுவம் கழுவும் பெண் ஆகியோரிடமும் விளையாடியிருக்கிறான் காமவெறியன். அந்தப் பெண்ணின் பெற்றோர்க்கு, அண்ணாவும் நாங்களும் மிகவும் ஆறுதல் மொழிகள் சொன்னோம். சட்டரீதியான மணவிலக்குப் பெறுவதென முடிவு செய்யப்பட்டது.

வந்த மூன்றாவது நாள் அண்ணா புறப்பட்டார்கள், ஆர்வம் குன்றிச் சோர்வு மேலிட்ட முகத்துடன்! அவர்களை வழியனுப்பி வைத்தபோது, இத்தனை ஆண்டுகளாக நான் பார்த்துப் பழகிவந்த அந்த அறிஞர் அண்ணா கண்முன் தெரியவில்லை. இலட்சக்கணக்கான தம்பிமார்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கேற்று, துயர்களைந்திட அயர்வின்றிப் பணியாற்றும் அருளாளர், அன்பாளர்-ஈடு இணையிலாத இனத்தின் தலைவர் - தனித்த-பெரு மகனார்-அய்யோ நினைக்க நினைக்க என் விழியூற்றுப் பீரிட்டுப் பார்வையை மறைத்தது! நீண்ட நேரமாயிற்று என் கண்ணிரருவி வறண்டு போக!