பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

அண்ணா—சில நினைவுகள்


அண்ணா, காலையில் எழுந்தவர், மேலே சட்டையில்லாமல் படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிறார். செய்தித் தாள்களிலும், வானொலியிலும், தொலைபேசியிலும் வெளியூர்களின் போராட்டச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன - கோவை, திருப்பூர், குமாரபாளையம், பொள்ளாச்சி இங்கெல்லாம் மாணவர் மீது ராணுவம் சுடுகிறது ஆணவமாய் என்று! நேரம் செல்லச் செல்ல அண்ணா அப்படியே சுருண்டு படுக்கிறார். எதிரிலிருந்த கலைஞரும் நானும் “அண்ணா பல் விளக்கிவிட்டு ஏதாவது சாப்பிடுங்கள்” என்று கெஞ்சுகிறோம். முகம் பொலிவும் களையும் இழந்து, கண்கள் ஒளி குன்றிக் காணப்படுகின்றன. எழவே மறுக்கிறார். “இவ்வளவு பேர் சாகிறான். சாப்பாடு ஒரு கேடா? போலீசார் சுட்டாலும் காரணம் கேட்கலாம். ராணுவம் சுடும்போது ஒன்றும் கேட்கக்கூட முடியாதே!” என்கிறார். “நாம் என்னண்ணா செய்ய முடியும்? மாணவர்களைப் போராடச் சொல்லி நாமா வேண்டினோம்?” என்கிறார் கலைஞர். “பிறகு இதற்கு என்னதான் முடிவு? எப்படி நிறுத்துவது?” -இது அண்ணா விடுத்த வினா?

“நாமே ஓர் அறிக்கை விட்டு மாணவர்களைக் கேட்டுக் கொள்வோம், நிறுத்தும்படி"-கலைஞர்.

“அப்படியானால், இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னதே நாம்தான் என்ற எண்ணம் வராதா?” -அணனா.

“ஆமாம், அண்ணா! கட்டாயம் வரும்! இரண்டுங் கெட்டான் நிலையில், நாம் வருத்தப்படுவது தவிர வேறென்ன செய்வது?"-கலைஞர்.

கடைசியில், மாலையில்தான் அண்ணா பல் விளக்கினார். பின்பு, ஓர் அறிக்கை வெளியிட்டார். பயன்? அடுத்து, கலைஞர் கைது செய்யப்பட்டுப், பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார், தனியே!