பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் அருணானந்தம்

213


தாம் எதிர்க்கட்சியாயிருந்தபோது, ஆளுங்கட்சியினரின் துப்பாக்கிச் சூடுகளினால் மாணவர்கள் மடிந்தார்களே என்று மட்டும் அண்ணா மனங்கலங்கினாரா? தாம் ஆட்சிக் கட்டில் ஏறிய பின்னர், ஒரு துப்பாக்கிப் பிரயோகமும் அவரை மிகவும் வருத்திவிட்டது!

ஒருநாள் முன் காலை நேரம். நான்மட்டும் நுங்கம் பாக்கம் சென்றேன். தனிமையிலிருந்த அண்ணா மாடிக் கூடத்தில் பரபரப்போடு அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தார்; திகில் படர்ந்த முகத்தோடு!

என்னைப் பார்த்ததும், “கருணாநிதி வந்திருக்கிறதா?” என ஆவலுடன் வினவினார். இல்லை யண்ணா! நான் மட்டுந்தான் வந்தேன். ஏன்?” - “என்னய்யா! கொடுமை ஒண்ணு நடந்து போச்சு! திருவொற்றியூர்லெ போலீஸ் Firing நடந்து, ரெண்டு பேர் செத்துட்டாங்களாம். தொழிலாளர் போராட்டம் ! எங்கேய்யா, லேபர் மினிஸ்டரா ஒரு ஆளைப் போட்டோமில்ல? ஆளையே காணோமே! வரச் சொல்லுய்யா அந்த மாதவனை! அப்புறம், நீ உடனே போயி, கருணாநிதியைக் கூட்டிகிட்டுவா!” -அண்ணன் ஆணை.

“நான் இப்போ அங்கேயிருந்துதான் வர்றேன் அவருக்கு இந்தச் சேதி தெரியாதண்ணா! இதோ போயி அழைச்சிகிட்டு வாறேன். நீங்க பதறாமெ இருங்க!” என்று இறங்கி ஓடினேன்.

மென்மையான அந்த உள்ளத்தின் தன்மை-மனித உயிர்கள் அநியாயமாய்ப் பறிக்கப்படக் கூடாது என்பது தான்!