பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

217


பரமசிவம் வீட்டில் அண்ணாவுடன் நாங்களெல்லாம் அமர்ந்து உணவருந்தியதையும், நின்றதையும் புகைப் படத்தில் காணுந்தொறும் என் மனம் அலைபாய்கிறது. இதற்குப்பிறகு அண்ணா அவர்களை எங்கும் விருந்துக்கு அழைத்துச் சென்றதாக நினைவில்லை எனக்கு!

ஆனால் முதலமைச்சர் அண்ணா, செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராகக் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்துப் புதிய வரலாறு படைத்தாரல்லவா? பல்லவர் புகழை மீட்டாரல்லவா? அதே மாவட்டத்தைச் சார்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராகியும் செய்யாத ஒன்றை அண்ணா சாதித்தாரல்லவா? அன்றைய தினம் காஞ்சி மாநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாதாபியை வென்று திரும்பியபோது பல்லவ மன்னனுக்கு வரவேற்பளித்தது போல!

அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அன்று மதியம், அண்ணா ஒரு பெரிய விருந்தளித்தார்கள். ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் என்று நினைவு. நூற்றுக்கணக் கான அலுவலர்கள் உள்ள பந்தியில் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்து நான் சாப்பிடத் தொடங்கினேன். அண்ணா என்னைத் தேடிக் கண்டுபிடித்துக் குனிந்து என் அருகில் வந்து, “அடடே sorry கருணானந்தம்! இது சைவ சாப்பா டல்லவா? சாப்பிட உட்கார்ந்துட்டியே! கொஞ்சம் இரு! ஒனக்கு மட்டும் பிரியாணி வாங்கிவரச் சொல்றேன். வெய்ட் எ மினிட்” என்கிறார், தமிழகத்தின் முதலமைச்சர்!

நான் “வேண்டாம் அண்ணா பரவாயில்லை; இதுவே நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைப்பதற்குள் என் கண்களில் நீர் கசிந்து, உள்ளம் உருகிக் கரைகிறது. அன்பினை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து திக்கு முக்காடிப் போகிறேன்.

“அண்ணா, அண்ணா! உனை எண்ணாத மனமே யில்லை-நீதானே அன்பின் எல்லை! அண்ணா, அண்ணா!