பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழைப்பு


தென்னகத்து நன்னகராம் திருச்சி, தம்பி!

திராவிடத்தின் மையத்தில் திகழும் பேரூர்!

முன்னொருநாள் சோழனது மூதூர் ஈதாம்!

முட்டவரும் பகையெதையும் வெட்டும் வீரர்

இன்னமுந்தான் இருக்கின்றார் இங்கே என்றால்,

என் மீது தவறில்லை; எழுந்து பாராய்!

இந்நகரின் தென்திசையில் பரந்தி ருந்த

எழிலான திடலெங்கே? இன்று காணோம்!


வள்ளுவரின் பெயராலே நகராம், இங்கே!

வானம்போல் விரிந்த பெரும் பந்தல் ஒன்று,

வள்ளுவரின் புகழ்போல வளருந் தன்மை,

வரலாறு காணாத புதுமை யாகும்!

வள்ளுவரின் குறள் போன்ற வடிவம் கொண்டோர்,

வாயிலிலே நிறுத்தி வைக்க இருசிங் கங்கள்,

வள்ளுவர் நூல் நயம்போல உயர்ந்த தூண்கள்,

மாடங்கள் அமைக்கின்றார் மரத்தால் செய்து!


அண்மையிலே, அறிவகத்தின் அறையில் கூடி,

அருமையுடன் பெருங்கலைஞர் ஆய்ந்து கூற,

வண்ணமிகு ஒவியங்கள் வரைந்து வைத்து,

வாழ்ந்துகெட்டோர் வரலாறு விளக்கு தற்குக்,

கண்கவருங் காட்சியொன்று காட்ட எண்ணிக்

கண்துயிலா துழைக்கின்றார், அன்புத் தோழர்!

மண்திருத்திப், புதரழித்து, மன்றம் கட்ட

மகிழ்வுடனே பலதோழர் உழைக்கின் றார்கள்!