பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

87


எழுந்து ஓடி விடலாமா என்றிருந்தது எனக்கு. பெண் கொடுப்பவர் கூட இப்படி என்னைச் சோதிக்கவில்லை; நம்ம அண்ணா ஏன் நம்மை இப்படி வாட்டி வதைக்கிறார்? என்று சிறிது கோபமே வந்தது. எதிரே தரையில் அமர்ந் திருந்த கே. ஆர். ஆர். நாடகக் குழுவினருக்கு மத்தியில், இராம. வீரப்பன் இருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே-அவரிடம் சென்று உட்கார்ந்தேன்.

“சாம்பு ஒரு டைம்பீஸ் வேணும்” என்றார் அண்ணா, கையில் அதை வாங்கிக் கொண்டபின், ஒரு கற்றை தாள்கள் - ஏதோ எழுதப்பட்டுள்ளவை - எடுத்தார்: என்னிடம் கொடுத்தார்! “இதோ பார்! சின்ன வேலை தான். இண்ணக்கி இவரும் நானும் (ம. பொ. சி. யும், அண்ணாவும்) திருச்சி ரேடியோவில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடத்துறோம்; பத்திரிகை உலகம் பற்றி. இரண்டு பேருக்கும் உள்ள பேச்சுகளை இதோ எழுதி வச்சிருக்கேன். வீரப்பனும் நீயும்—நானும் ம. பொ. சி. யுமா இருந்து—இந்த டயலாகைப் படிச்சி, நேரம் எவ்வளவு ஆகுதுண்ணு பாக்கணும். கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். எதைக் குறைக்க வேணுமோ—பிறகு பார்க்கலாம்! ரெண்டு பேரும் சத்தமாப் படிங்க” என்றார்.

வீரப்பன் விரும்பியவாறு அண்ணாவின் பகுதியை அவரிடம் தந்தேன் :—

“வணக்கம் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களே’ என்று கம்பீரமாக அவர் ஆரம்பித்தார். அவருக்கென்ன கஷ்டம்! சோதனைக்கு உள்ளாகி உட்கார்ந்து கிடப்பவன் நானல்லவா? “வணக்கம் அறிஞர் அண்ணாத்துரை அவர்களே” என்று நான் தொடங்கி யதும்-அண்ணா குறுக்கிட்டு, “நான்தான் உன் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டேனே. நல்லாப் படிய்யா!” என்றார் புன்னகை தவழ.