பக்கம்:அண்ணா நாற்பது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. பவம்போக்கு வோமெனும் பண்டார சந்நதியோ
அவதார புருடரோ அல்லல்ல அண்ணா நீ
அவர்தமைப்போ லில்லா அண்ணாவாய் நீயிருந்தும்
எவர்தாமும் உனைத்தொழு தேத்தினரே எதனாலே?


4. எக்காலும் கடவுள் எனஒருவர் இருந்ததிலை
மக்களுளே அறிஞரே மாறுவரவ் வாறென்றே
இக்காலம் சில்லோர் இயம்புவதை அண்ணாவால்
முக்காலும் உண்மை முடிபெனவே உணர்ந்தோமால்!


5. எத்தனை அறிஞர்கள் புலவர்கள் இந்நாட்டில் சிறந்து வாழ்ந்தார்
எத்தனை துறவியர்கள் முனிவர்கள் இந்நாட்டில் பொலிந்து வாழ்ந்தார்
எத்தனை வள்ளல்கள் மன்னர்கள் இந்நாட்டில் மிளிர்ந்து வாழ்ந்தார்
அத்தனை தரத்தினரும் அண்ணாவின் புகழெல்லை அடைந்த துண்டோ?


6. நாத்திகத்தின் பெருந்தலைவர் நம்பெரியார் ராமசாமி
ஆத்திகத்தின் அருந்தலைவர் அந்தணராம் ராஜாஜி
ஏத்துபுகழ் இருவரையும் இருகண்க ளாய்க்கொண்டாய்
நாத்திகரா ஆத்திகரா நவின்றிடுவாய் அண்ணா நீ!


7. மன்னர் குடும்பமதில் மாணப் பிறக்க வில்லை
துன்னுஞ் செல்வமிகு குடியினில் தோன்ற வில்லை
இன்னும் எவ்வாய்ப்பும் இயையப் பிறக்க வில்லை
என்ன வகையாலே இத்துணை பெருமை பெற்றாய்?


8. குறுமுனியே போலக் குழையும் குறளுருவம்
குறளதுவே மானக் குலவும் குறளுருவம்
முறுவலொளி யாண்டும் முகிழ்க்கும் அருளுருவம்
மறுவறுநற் றமிழர் மகிழும் பொருளுருவம்.

6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/8&oldid=1030965" இலிருந்து மீள்விக்கப்பட்டது