8
மக்களை நல்லவர்களாக்க வேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம் சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழித்தாக வேண்டும்-என்று பேசி வந்தபோதும் நாட்டை மீட்க வேண்டும் என்று அவர் அன்னியருடன் போரிட்டபோதும் கிளம்பாத பயங்கரச் சக்தியொன்று கிளம்பியது, கோட்சே உருவில். அதுதான் மத ஆதிக்க வெறி; அதனால் கொலையுண்டார்.
தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக, அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத் தூவ, அங்குச் சென்றபோது, புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போல், நாட்டை மீட்டு, நல்லாட்சி அமைத்து, மக்களை நல்லவர்களாக்குவதற்காகக் கருத்தைப் பரப்பும்போது, கோட்சே கிளம்பினான். இந்தப் பழியைத் துடைத்தாக வேண்டும். பாரெங்கும் பேசுவர், நாட்டை மீட்டுத்தந்த உத்தமனை, உள்நாட்டு மத ஆதிக்க வெறி கொன்றது என்று.
மேட்டினைப் பூந்தோட்டமாக்க விதை கொண்டு வந்த வேளையில், பாம்பொன்றினால் இறந்த தோட்டக்காரனைக் கண்டு புலம்புவதும், பாம்பை அடித்துக் கொல்வது மட்டுமல்ல, குடும்பத்தாரின் கடமை. இறந்து கிடப்பவரின் கரத்திலே உள்ள விதையை எடுத்துப் பார்த்து விம்மி அழுதான். பிறகு, இவைகளைத் தூவி இங்கு பூந்தோட்டம் காண விரும்பினார்; அவர் மறைந்தார். விதையோ இருக்கிறது இதோ. இதைத் தூவுவேன், இதோ இருக்கிறது; பூந்தோட்டம் காண்பேன்; அந்த உருவில் அவரைக் காண்பேன்; அந்த மணத்திலே அவர் பெருமை தெரியக் கண்டு மகிழ்வேன்-அவர் செய்துவந்த பணியை நான் மேற்கொள்வேன் என்று கூற வேண்டும். மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும்பாம்பை ஒழித்தாக வேண்டும். அவர் அனைவரும் ஒன்று எனும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம் என்பதே, நமது உறுதியாக இருக்க வேண்டும்.
புத்தர் காலத்திலே நடந்தேறியது போலப், புதிய வழியைக் கொள்வோம் என்ற உறுதி கொண்டு உழைப்பதே, நாம் அந்த உத்தமருக்கு எழுப்பக் கூடிய நிலையான ஞாபகச் சின்னம்.
✽
[இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமைதந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.]