பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் தூது

37

கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு எழுந்தது.

இதற்கு என்ன வழி என்று பல நாள் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு, ஔவையாரைக் கொண்டு அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. தன் கருத்தை அந்தப் புலவர் பெருமாட்டியிடம் அறிவித்தான். அவர் பேருவகையோடு, அவ்வாறே செய்யலாம் என்று சொன்னார். உடனே தக்க காவலர்களும், கையுறைகளைத் தாங்கிச் செல்லும் மக்களும், ஏவலர்களும் உடன் செல்லப் பணித்து, ஒரு சிவிகையில் ஔவையாரை ஏற்றித் தொண்டை நாட்டை நோக்கி அனுப்பினான் அதிகமான்.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஔவையார் சென்ற வழியில் எல்லாம் அவருக்குச் சிறப்புக் கிடைத்தது. மக்கள் அவரைக் கண்டு இன்புற்றார்கள். அன்பு கனியப் பேசினார்கள். சில நாட்களில் ஔவையார் காஞ்சியை அடைந்தார். மன்னர்க்குரிய வரிசைகளுடன் வந்த அவரை இன்னாரென்று தெரிந்துகொண்ட தொண்டைமான் அவரை வரவேற்றுப் பெருஞ்சிறப்புச் செய்தான். “தங்களுடைய பெருமையைக் காதாலே கேட்டிருக்கிறேன்; இப்போது கண்ணாலே தங்களைக் காணும் பேறு கிடைத்தது” என்று உவகை பொங்கக் கூறினான்.

“அதிகமானிடத்திலிருந்து நான் வருகிறேன். அவனுடைய வள்ளன்மையை யாவரும் அறிவார்கள். அவன் உன்னுடைய நட்பை வேண்டி என்னைத் தூதாக அனுப்பினான். தகடூர் என்னும் ஊரில் இருந்து, வீரமும் ஈகையும் விளங்க அரசாளும் அந்தத் தலைவனுடைய ஏவலை மேற்கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் ஔவையார்.