பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அதிகமான் நெடுமான் அஞ்சி


“தங்களைப் போன்ற பெரியவர்களை உறவினர்களாகப் பெற்ற அதிகமான் கிடைத்தற்கரிய பேறுடையவன்தான் என்று சொல்ல வேண்டும். அவனுடைய நட்பை ஏற்றுக்கொள்வது எனக்குப் பெருமையையே தரும்” என்று கூறிஅளவளாவினான் தொண்டைமான்.

ஔவையார் காஞ்சிமாநகரின் எழிலைப் பார்த்தார். தொண்டைமானது அரண்மனையை நன்றாகப் பார்த்தார். “இந்த அரண்மனையில் படைக்கலங்களை வைத்திருக்கும் கொட்டிலை நீங்கள் பார்க்க வேண்டும். சேர சோழ பாண்டியர்களிடங்கூட இவ்வளவு படைக்கலங்கள் இருக்குமோ என்பது ஐயந்தான். மிகவும் நன்றாக அவற்றை வைத்துப் பாதுகாக்கும்படி செய்திருக்கிறேன்” என்று தொண்டைமான் கூறினான். ஔவையாரை அங்கே அழைத்துச் சென்றான்.

படைக்கலக் கொட்டில் பெரிதாகவே இருந்தது. ஒரு பக்கம் ஈட்டிகளாக வைத்திருந்தார்கள். மற்றொரு பக்கம் கேடயங்களாக இருந்தன. வேறு ஓர் இடத்தில் பளபளவென்று ஒளிர்ந்த வாள்களை மாட்டி வைத்திருந்தார்கள். வேல்கள் ஒருபால் விளங்கின. வில்லு அம்பும் ஓரிடத்தில் இருந்தன. கவசங்களும், தலையில் அணிகின்ற இருப்பு மூடிகளும் தனித்தனியே காட்சி அளித்தன. இன்னும் பல வேறு படைக்கலங்களை ஔவையார் அங்கே கண்டார். யானையின் அங்குசங்களும், குத்துக் கோல்களும் ஓரிடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. யானை நெருஞ்சிமுள்ளைப் போல இரும்பிலே செய்திருக்கும் படை ஒன்று உண்டு; அதற்குக் கப்பணம் என்று பெயர். போர்க்களத்தில் பகைவரின் யானை வேகமாக வரும்போது கப்பணங்களை அதன் முன் தூவுவார்கள். அதன் காலில் அவை தைக்கும்; மேலே நடக்க முடியாமல் அது தடுமாறும். அத்தகைய கப்பணங்கள் ஓரிடத்தில் குவியலாகக் கிடந்தன.