பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் தூது

39


ஆயுதபூசை நடக்கும்போது தொழிலாளர்கள் தம்முடைய கருவிகளையெல்லாம் தூசின்றித் துடைத்து மெருகிட்டு வைப்பார்கள்; பூவையும் மாலையையும் சூட்டி வழிபடுவார்கள். அங்கே இருந்த படைகள் எல்லாம் அந்த முறையில் விளங்கின. அவற்றைப் பளபளவென்று தேய்த்து எண்ணெய் பூசியிருந்தார்கள். உடைந்ததாக ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் நன்றாகச் செப்பஞ் செய்து பளபளக்கும்படி வைத்திருந்தார்கள். மயிற் பீலியைச் சிலவற்றிற்கு அணிந்து அழகு செய்திருந்தார்கள். மாலைகளைப் புனைந்திருந்தார்கள். அந்தக் கொட்டில் நல்ல பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்தது. காவலர்கள் அங்கே இருந்து காவல் புரிந்து வந்தார்கள்.

“இத்தனை படைக்கலங்களையும் நீங்களே வாங்கினீர்களா?” என்று ஔவையார் கேட்டார்.

“என் முன்னோர்கள் வைத்திருந்தவை பல; நான் வாங்கினவை சில.”

“இப்போது ஏதேனும் விழா உண்டோ? இவற்றை நன்றாகத் தேய்த்து அணி செய்திருக்கிறீர்களே !”

“இப்போது மட்டும் அன்று; எப்போதுமே இவை இந்த நிலையில்தான் இருக்கும். ஒரு வேலின் முனை கூட முரிந்திராது.”

“அடிக்கடி இவற்றைச் செப்பஞ் செய்யும்படி இருக்குமோ?”

“செப்பம் செய்ய வேண்டி இராது. அடிக்கடி துடைத்து நெய் பூசச் செய்வேன்.”

“இந்தப் படைக்கலங்கள் யாவுமே உங்களுக்குப் பயன்படுகின்றனவா ?”

“ஆம், இவற்றால் எனக்கு எத்தனை பெருமை! வருகிறவர்களுக்கெல்லாம் இந்தக் கொட்டிலைக் காட்டுவேன். கண்டவர்கள் யாவரும் வியப்படைகிறார்கள்.”