பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அதிகமான் நெடுமான் அஞ்சி


புறத்திலிருந்து விடும் அம்புகள் உள்ளே போய் விழுமேயன்றிக் குறி பார்த்து அடித்தால் தைப்பது போலத் தைக்குமா? சேரமான் வீர்ர்கள் அம்பை மதிலுக்குள் விட்டுக்கொண்டே இருந்தார்கள். உள்ளே இருந்தவர்களும் அம்பை எய்தார்கள்; சுடுமணலை வீசி விட்டார்கள்; இரும்புக் குண்டுகளை இறைத்தார்கள்; ஈட்டி முதலிய கூரிய படைக் கலங்களையும் மதிலின் மேல் இருக்கும் மேடையில் மறைந்திருந்து வீசினார்கள்.

அகழியை நெருங்காமல் விலகி நின்றார்கள் சேரன் படை வீரர்கள. அணுகினால் மேலிருந்து வந்த அம்புகளும் பிற படைகளும் அவர்களைக் கொன்றன. ஆதலால் விலகியிருந்து அம்பை எய்தார்கள். யானை முதலியவற்றைப் பின்னுக்கு நகர்த்தி வில் வீரர்கள் முன்னணியில் நின்றார்கள். அவர்கள் கவசம் அணிந்து கையில் கேடயத்தையும் வைத்திருந்தமையால், வரும் அம்புகளைத் தாங்க முடிந்தது.

“சான்றோர்கள் கூறியதைக் கேளாமல் வந்தது தவறு” என்று இரும்பொறை தன்னைத்தானே நொந்து கொண்டான். ஊருக்குப் புறம்பே ஓரிடத்தில் படை பாளையம் இறங்கியிருந்தது. முதல் நாள் இரவு சேரன் தன் பாசறையில் அமர்ந்திருந்தான். மலையமான் திரு முடிக்காரி, பிட்டங் கொற்றன், நெடுங்கேரளன் முதலிய படைத்தலைவர்கள் உடன் இருந்தார்கள்.

“எத்தனை காலம் புறத்தில் நின்று போர் செய்தாலும் அதிகமானை வெல்ல முடியாதுபோல் இருக்கிறதே! நாம் விடும் அம்புகள் யாவுமே வீணாகின்றன. அவர்கள் அம்புகளோ நம் யானைகளையும் குதிரைகளையும் மாய்க்கின்றன; வீரர்களையும் புண்படுத்துகின்றன. முதல் நாளிலேயே இந்தத் தடுமாற்றம் வந்தால் மேலே எப்படிப் போரை நடத்துவது?” என்று தளர்ச்சியைப் புலப்படுத்தும் குரலோடு பேசினான் சேரன்.